ப.பாலசுப்பிரமணியம்
நான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை வல்லுநராகி உள்ளார். தமது 21ஆம் வயதிலிருந்து செய்துவந்த பாதுகாவல் பணி இவரை புதிய பாதைக்கு இட்டுச் சென்றது. லிட்டில் இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் உணவு விழாவையொட்டி நடந்த நான்கு நாள் 'சுவை' உணவு அங்கத் திற்குப் பாதுகாவலராகப் பொறுப்பு வகித்தார் பெர்னார்ட். அப்போது, தேவகி சண்முகம், கே.தாமோதரன், பாலசுந்தரம் பிள்ளை போன்ற பிரபல இந்திய சமையல் வல்லுநர்களைச் சந்திக் கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
"திருமதி தேவகி சண்முகத்தி டம் பேசினேன். அவர் சமைத்த உணவு வகைகளைச் சுவைத்தேன், சமையல் கலைப் பயணத்தையும் அத்துறையையும் பற்றி விளக்கி னார். சமையற்கலையில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன என்பது அன்றுதான் தெரிய வந்தது," என்ற பெர்னார்ட் இத்துறையில் தமது ஆர்வம் எப்படி வளர்ந்தது என்பதை விவரித்தார். பின்னர், 2015ல் சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற 'ஃபூட்&ஹோட்டல் ஏஷியா' எனும் வர்த்தக உணவுக் கண்காட்சியில் பாதுகாவல் பணியில் ஈடுபட்ட போது, பிரபல இந்திய சமையல் வல்லுநரும் வசந்தம் ஒளிவழி 'சுவை' சமையல் போட்டியின் நீதிபதியுமான ஆல்பர்ட் செல்வா ராயனை சந்தித்தார் பெர்னார்ட்.