சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதய நோய்கள் பற்றி மரபணு மூலம் நன்கு அறிந்துகொள்ள புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இது இதய நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை உருவாக வழி வகுத்துள்ளது.பொதுவாக இதயநோய் பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட மரபணுக்களால் ஏற்படக்கூடிய பாதிப்பாகும்.
ஒரு குறிப்பிட்ட நோய் எந்த வகை மரபணுக்களால் ஏற்பட்டது என்று அறிந்துகொள்வது என்பது மருத்துவத் துறை அறிவியலாளர்களுக்கு ஒரு பெரிய சவால் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். புரிந்துகொள்ள முடியாத சிக்கலான மரபணுக்களையும் அவை எவ்வாறு இயங்கி வினை புரிகின்றன என்றும் மருத்துவ அறிவியலாளர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின், யோங் லூ லின் மருத்துவப்பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதய நோய்களில் மரபணு எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சிக் குழுவுக்கு பேராசிரியர் ரோஜர் ஃபோ தலைமை வகித்தார்.
மனித உடலிலும் ஈக்கள், புழுக்கள் ஆகியவற்றுக்கு உள்ளதைப் போலவே ஏறக்குறைய 20,000 மரபணுத் தொகுப்புகள் உள்ளன. ஆனால் புழுக்களிலும் ஈக்களிலும் இருப்பதைக் காட்டிலும் மனிதர்களின் மரபணுத் தொகுப்புகளில் சற்று சிக்கலான முறையில் ஏராளமான மாற்று விசைகள் உள்ளன.
இந்த மாற்றுவிசைகள் அவ்வப்போது சில மரபணுக்களைச் செயலிழக்கவும் செயல்படவும் தூண்டிக்கொண்டே இருக்கும். எனவே தான் மருத்துவ அறிவியலாளர்களுக்கு நோய்க்கான காரணிகளைக் கண்டுபிடிப்பது என்பது சவாலாக உள்ளது என்கிறார் பேராசிரியர் ரோஜர் ஃபூ.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த குறியீட்டு வரைபடக் கருவிக்கு ‘கனெக்ட்டோம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. “‘கனெக்ட்டோம்’ கருவியைப் பயன்படுத்தி நோய் குறித்த விவரங்களைக் கண்டறியும்போது, நோயுடன் தொடர்புடைய புதிய மரபணுக்களையும் அடையாளம் காண முடியும்,” என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான துணைப் பேராசிரியர் சுக்வுமேகா ஜார்ஜ் அனெனெசுலு.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு மூலம் மருத்துவ அறிவியலாளர்கள் இதய நோய்க்கான காரணிகளைக் கண்டுபிடிப்பது எளிதாகியுள்ளது என்றார் அவர்.