புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்றால் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 183 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேர் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மகாராஷ்டிராவிலும் டெல்லியில் இருவரும் குஜராத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 55 பேர் வெளிநாட்டினர். மேலும் நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 423 பேரும், தமிழகத்தில் 411 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே டெல்லியில் 386 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 295, ராஜஸ்தானில் 179, ஆந்திராவில் 161, தெலுங்கானாவில் 158 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே உள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மிசோராம், அருணாசலப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் தலா ஒருவர் மட்டுமே கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட், மணிப்பூரில் தலா இருவரும், இமாச்சலப்பிரதேசத்தில் 6 பேருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக இடைவெளியைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என மத்திய சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோயால் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 26 பேரும், குஜராத்தில் 9 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும் பலியாகி உள்ளனர். மத்தியப் பிரதேசத்திலும் டெல்லியிலும் தலா 6 பேரும், பஞ்சாபில் 5 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் மேற்கு வங்கம், கர்நாடகாவில் தலா மூன்று பேரை கொவிட்-19 காவு வாங்கியுள்ளது.
கேரளாவில் பலி எண்ணிக்கை 2ஆக உள்ள நிலையில் ஆந்திரா, பீகார், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.