அதானி விவகாரம்: ரோஜாப்பூ கொடுத்து நூதனப் போராட்டம்

1 mins read
93f7146b-7068-4e49-8e5b-d01625c49eb5
தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ரோஜாப்பூ மற்றும் தேசியக் கொடி அளித்த ராகுல் காந்தி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் புதன்கிழமை (டிசம்பர் 11) நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பாஜக எம்பிக்களுக்கு ரோஜாப்பூ மற்றும் தேசியக்கொடியைப் பரிசளித்தனர்.

தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜாப்பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார். ஆனால், அவற்றை வாங்க ராஜ்நாத் சிங் மறுத்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக, தற்போது அதானிதான் நாட்டை வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம்.

“அனைத்தும் அவருக்குத்தான் கொடுக்கப்படுகின்றன. ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்,” என குறிப்பிட்டார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பி சுக்தியோ பகத் கூறுகையில், “பாஜக அரசு நாடாளுமன்றத்தைத் தவறாக நடத்துகிறது.

“அதானியின் பெயர் வந்தவுடனேயே அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற நடத்தைக்கு உட்பட்டே நாங்கள் தேசியக் கொடியையும் ரோஜாப்பூவையும் விநியோகிக்கிறோம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்