புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா உறவு குறித்த விவாதத்தில் உத்திபூர்வ கொள்கை மற்றும் பொருளியல் கொள்கை இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் (படம்) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்தார்.
“அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘சீனாவுடனான இந்தியாவின் உறவில் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தானாக முன்வந்து அளித்த அறிக்கையைக் காங்கிரஸ் ஆய்வு செய்தது.
“அறிக்கை குறித்து எம்.பி.க்கள் எந்த விளக்கத்தையும் பெற அனுமதிக்கப்படவில்லை. 2020ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன் இருந்த பழைய இயல்புநிலை சீனாவால் சீர்குலைக்கப்பட்டது. பிறகு, மோடி அரசாங்கம் ஒரு புதிய நிலையை ஒப்புக்கொண்டு புதிய இயல்புடன் வாழ ஒப்புக்கொண்டது.
“லடாக் எல்லைப் பகுதியில் நமது கால்நடை மேய்ப்பவர்களுக்கான பாரம்பரிய மேய்ச்சல் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதா? நமது பாரம்பரிய சுற்றுக்காவல் பகுதிகளில் தடையின்றி அணுக வழி கிடைக்குமா? என்பன உள்ளிட்டவை குறித்து வெளியுறவு அமைச்சரின் அறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை.
“எனவே இந்தியா-சீனா உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும்,” என்று ஜெய்ராம் ரமேஷ் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

