தமிழ்நாட்டின் வரும் சட்டமன்றத் தேர்தல் பெண்களின் பலத்துக்குப் பலப்பரீட்சையாக அமைந்துள்ளது. நடிகர் விஜயகாந்த் 2005 செப்டம்பரில் தேமுதிக கட்சியைத் தொடங்கியதில் இருந்து அவருக்கும் கட்சிக்கும் பக்கபலமாகத் திகழ்ந்து வந்த பிரேமலதா, இந்தத் தேர்தலில் நேரடியாகக் களமிறங்கவுள்ளார். விஜயகாந்த் தமது ரசிகர் மன்றங்களைக் கட்சியாக வளர்த்து, தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளுக்கு மிரட்டலாக உருவெடுக்க முக்கிய பங்காற்றியவர் இரு மகன்களுக்குத் தாயான பிரேமலதா.
தேமுதிக மேடைகளில் முன்னணியில் இருப்பவர் கட்சியின் மகளிர் அணி செயலாளருமான பிரேமலதாதான். அவர் திமுக, அதிமுகவை காரசாரமாக விமர்சித்து வருகிறார். தேமுதிக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்களை திமுகவுக்கு இழுக்கும் வகையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார் என்று சனிக்கிழமை சேலத்தில் பேசிய பிரேமலதா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, சேலத்தில் பிரேமலதா தங்கியுள்ள தனியார் ஹோட்டலை அதிமுகவினர் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் அவதூறாக பேசிவருவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தியுள்ளனர். எத்தனை எதிர்ப்புகள் வந்தபோது இந்தத் தேர்தலில் ஒருகை பார்த்துவிடுவது என்ற உறுதியுடன் களமிறங்கியுள்ளார் பிரேமலதா. அவரது சொந்த ஊர் வேலூர் என்றபோதும் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.