இந்தியாவின் மூத்த தேசிய புலனாய்வு அதிகாரியான தன்சில் அகம்மது உத்திரப் பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிஜ்னோரில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு மனைவியுடன் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அவர் காரை நோக்கிச் சரமாரியாக சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மொரதாபாத் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமுற்ற அவரது மனைவி பர்ஷானாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் ஜனவரி மாதம் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவில் இவர் இடம் பெற்றுள்ளார். இவர் மேலும் பல்வேறு பயங்கரவாத தொடர்புடைய முக்கிய வழக்கை விசாரித்தவர் என்றும் கூறப்படுகிறது. எனவே, தன்சில் கொலையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனப் பயங்கரவாதிகள் தடுப்புச் சிறப்புப் படை காவல் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை தொடங்கி உள்ளனர். இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.