சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் வழி தமிழகத்திற்கு நிச்சயமாக விடியல் வரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவினர் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். "தமிழகத்தில் செயலற்ற ஆட்சி, நிர்வாகம் நிலைகுத்திப் போன ஆட்சி நடைபெறுகிறது.
இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற மக்கள் உறுதி பூண்டு இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா பொது மக்களைச் சந்தித்தது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின். திமுகவினர் தினமும் வீடு வீடாகச் சென்று 50 பேரையாவது சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்றால் திமுக ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்றார்.