புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது, அந்நாட்டு ஓட்டல்களில் தங்குவதைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்றும் பயணத்தின்போது விமானத்தில்தான் தூங்குகிறார் என்றும் பிரதமர் அலுவலத்தின் மூத்த அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர். மோடி பிரதமராகப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இதுவரை 95 நாட்கள் வெளிநாட்டில் கழித்துள்ளார். 20 பயணங்களில் 40 நாடுகளுக்குச் சென்றுள்ளார். நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக அவர் இரவு நேரப்பயணங்களையே மேற்கொண்டு வருகிறார். அதனால் அவர் வெளிநாட்டுப் பயணங்களின்போது அதிகமாக விமானத்தில்தான் தூங்கி வருகிறார்.
அந்தந்த நாடுகளில் நடந்த மாநாடுகள் குறித்து நாடு திரும்பிய பிறகு கலந்துரையாடக் காத்திருக்காமல் மோடி, தான் பயணம் செய்த விமானத்திலேயே அதிகாரிகளுடன் கலந்துரையாட விரும்புவார். வெளிநாடுகளில் ஓட்டல்களில் தங்கினாலும் மோடி பங்கேற்ற கூட்டம், மாநாடுகள் பற்றி கண்டிப்பாக அதிகாரிகளுடன் கலந்துரை யாட விரும்புகிறார்.
அண்மையில் மோடி சென்ற மூன்று நாடுகள் பயணத்தின் போது மூன்று நாட்கள் இரவு ஏர்இந்தியா விமானத்தில்தான் தூங்கினார். "இரண்டு நாட்கள் மட்டுமே வெளிநாட்டு ஓட்டல்களில் அதாவது வாஷிங்டனில் ஒரு நாளும் ரியாத்தில் ஒரு நாள் இரவும் தங்கியுள்ளார். "மோடி இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்து அங்கு தங்கி இருந்தால் நாங்கள் நாடு திரும்ப குறைந்தபட்சம் ஆறு நாட்களாவது கூடுதலாக ஆகி இருக்கும்.
"பிரசல்ஸ் செல்லும் போதும் நள்ளிரவிலேயே புறப்பட்டோம். 9 மணி நேரப் பயணத்திற்குப் பின் காலை ஆறு மணிக்கு அங்கு சென்றடைந்தோம். "அடுத்த நாள் அதிகாலையில் முக்கியமான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தால் மட்டுமே வெளி நாட்டு ஓட்டல்களில் இரவு நேரத்தில் அவர் தங்குவார்," என்று மோடியுடன் சென்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.