புதுடெல்லி: இந்தியாவில் இவ்வாண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை மூன்று இலக்க எண்ணாகப் பதிவாகி, ஆக அதிகமாக 115 டிகிரி ஃபாரன்ஹீட்வரை உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் இதுவரை சுமார் 135 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் பலர் வெயிலில் சுருண்டு விழுந்து மாண்டு போயினர். கடந்த ஆண்டு அனல் காற்றினால் தெலுங்கானா, ஆந்திராவில் மட்டும் 2,300 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட் கிழமை ஒரிசா மாநிலம் புவனேஷ் வரில் 114.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
43 ஆண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத்தின் வெப்பநிலை ஏப்ரல் மாதத்தின் ஆக அதிகமான பதிவாக நேற்று முன்தினம் 42.7 டிகிரி செல்சியஸை எட்டியது. ஹைதராபாத்தில் ஆக அதிக வெப்பநிலையாக 43.3 டிகிரி செல்சியஸ் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பதிவானது.