சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு சிலர் விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறார் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியை உடைக்க சில கட்சிகள் சதி செய்வதாக குற்றம்சாட்டினார். இத்தகைய சதித்திட்டம் ஒரு போதும் எடுபடாது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் கூட்டணியை ஒரு போதும் பலவீனப்படுத்த முடியாது என்றார். "அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நலக் கூட்டணி, புதிய வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதனால் தங்களின் வெற்றி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள சில கட்சிகள் எங்கள் கூட்டணியை உடைக்க சதி செய்து வருகின்றன.
"தமாகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து நிர்வாகிகளுடனும் ஆலோசித்த பிறகே மக்கள் நலக் கூட்டணியில் இணை வது என முடிவு செய்தோம். கட்சியின் இந்த ஒருமித்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்," என்றார் வாசன். ஒரு சில தனிநபர்கள் கட்சியை விட்டு விலகுவதால் தமாகாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப் பிட்ட அவர், அந்தச் சிலர் எதற்காக விலகினார்கள், அவர்களுக்குப் பின் னால் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.