புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்பட்ட 14,000க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மீட்கப்பட்டிருப்பதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கு இடையிலான குழு, அனைத்து விதமான மனிதக் கடத்தல் நடவடிக்கைகளையும் தடுக்கும் விதத்தில் சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். தேசிய குற்ற அறிக்கை பதிவுப் பிரிவு வழங்கிய தகவலின்படி, பாலியல் சுரண்டலின் கீழ் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் 2014ஆம் ஆண்டில் 4,743 பேரும் 2015ஆம் ஆண்டில் 9,483 பேரும் மீட்கப்பட்டிருப்பதாகவும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சு, 'உஜ்ஜவாலா' என்ற விரிவாக்கத் திட்டத்தின் கீழ் பெண்களை பாலியல் குற்றங்களில் ஈடுபடச் செய்யும் வகையில் கடத்தப்படுவதை தடுப்பதுடன் அவ்வகையில் கடத்தப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் பாதுகாப்பான இடத்தில் அவர்களைத் தங்கவைத்து புனர்வாழ்வு வழங்கியும் சேவையாற்றி வருகிறது. நாட்டின் 234 மாவட்டங் களிலும் அனைத்துவிதமான மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை உள்துறை அமைச்சு ஏற்படுத்தி உள்ளதாகவும் மேனகா காந்தி கூறினார்.