மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், தெற்கு மும்பையின் காமாத்திபுரா பகுதியில் மூன்றடுக்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட அறுவர் பலியாகினர். ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான கட்டடத்தைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அக்கட்டடம் சனிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. அதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர், "இந்தக் கட்டட விபத்தில் சிக்கி, அதில் குடியிருந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றொருவர் சிகிக்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் மூவருக்கு தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட காமாத்திபுரா பகுதி சட்டமன்ற உறுப்பினர் அமீன் படேல் பேசுகையில், "இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; விபத்துக்குள்ளான கட்டடத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்," என்று சொன்னார். இதனிடையே, "காமாத்திபுராவில் உள்ள நூற்றுக்கணக்கான விதி மீறல் கட்டடங்கள் குறித்து விரி வான விசாரணை நடத்த வேண் டும்," என்று மாநில பாஜக வலி யுறுத்தியுள்ளது.
மும்பை காமாத்திபுராவில் ஏறத்தாழ 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் திடீரென்று இடிந்து அறுவர் உயிரைப் பலிவாங்கியது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன. படம்: இந்தியத் தகவல் சாதனம்