புதுடெல்லி: அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கறை படிந்தவைதான், ஊழலை ஒழிப்பேன் என்று பாஜக சூளுரைத்தது உண்மையானால் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. அக்கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, "வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் தொடங்கப்பட்டது. மன்மோகன் சிங் அரசு அதை நிறைவு செய்து, ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால்தான் சோனியா காந்தி மீது மோடி அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மோடி அரசின் நோக்கங்கள் ஊழலை ஒழிப்பதாக இருக்குமேயானால், இதில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும். சோனியா காந்தி, அகமட் படேல் முதல் எஸ்.பி.தியாகி, பிற அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். இதில் சில பத்திரிகையாளர்களும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது," என்றார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவ தாக நேற்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதனை விமர்சிக்கும் வகை யில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஹெலிகாப்டர் ஊழலை மறைக்கும் வகையிலேயே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது எனக் குற்றம் சாட்டினார். "காங்கிரசுக்கு ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்பில்லை என்றால் ஏன் ஒப்பந்த விலையை ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 4,000 கோடியாக உயர்த்த வேண்டும்? சில நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை காட்டியது ஏன் போன்ற 10 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்," என்றார் வெங்கய்ய நாயுடு. இதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 4-ஆம் தேதி முழு ஆவணங்களையும் சமர்ப்பிக்கப் போவதாக இந்தியத் தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.