புதுடெல்லி: சுதந்திர நாடான பிறகு இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் இருந்த டெல்லி, கடந்த 1956ல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன்படி டெல்லியின் காவல் துறை, மாநகராட்சிகள் உட்படப் பல முக்கிய துறைகள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் வருகின்றன. இந்தக் கண்காணிப்புப் பணியை மத்திய அரசு சார்பில் துணை நிலை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். அவர் அவ்வப்போது மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து வருகிறார்.
இதனால் டெல்லியில் ஆளும் கட்சியின் சார்பிலான முதல்வர் மற்றும் மத்திய அரசு என இரு அதிகார மையங்கள் உள்ளன. இவர்கள் இருவேறு கட்சிகளாக அமையும்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுத் தலைநகரின் முன்னேற்றம் தடைபடுவதாக புகார் நிலவுகிறது. தற்போது இந்த வகை மோதல் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சிகளிடையே தொடர்கிறது. டெல்லியைத் தனி மாநிலமாக மாற்றுவோம் என்று இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. ஆனால் கடந்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜக அமைதி காத்து வருகிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தனது முயற்சியைத் தொடர்கிறது. இந்த வகையில் டெல்லியைத் தனி மாநிலமாக மாற்றுவதற்கான சட்ட முன்மொழிவை அடுத்த வாரம் தயாரிக்க இருப்பதாக அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் தனது திட்டப்படி சட்ட முன்மொழிவைத் தயார் செய்து பொதுமக்களின் கருத்துகளை அறிய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளார். பிறகு தனது அமைச்சரவையால் மசோதா ஏற்கப்பட்ட பின் அதை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். இங்கு நிறைவேற்றப்படும் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு இதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற வேண்டி இருக்கும். இதற்கு ஏதுவாக குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகைகள், பிரதமர் அலுவலகம், குடியிருப்புகள், வெளிநாடுகளின் தூதரகங்கள் என டெல்லியை மாநில அரசாக மாற்ற தடையாக உள்ள பகுதிகளை மத்திய அரசின் அதிகாரத்திலேயே விட்டுவிடக் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.