சென்னை: காங்கிரஸ் ஆட்சியில் இணைந்திருப்பது இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று 2013ல் கூறினார் கருணாநிதி. இப்போது 2016 தேர்தலுக்காக காங்கிரசுடன் கை கோர்த்து ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றார் என்று சாடியுள்ளார் காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் (படம்). "நேற்று வரை ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரஸ் இனியென்ன நல்லது செய்யப்போகிறது என்பதை கருணாநிதி விளக்க வேண்டும். "கிரானைட் முறைகேடு விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி குற்றம் சுமத்துகின்றன. இடதுசாரிகள் அவர்களைக் குற்றம் சாட்டுகின்றனர். என் னைக் கேட்டால் மூவருக்குமே குற்றம் சுமத்துவதற்குத் தகுதி யில்லை. மதுரை கிரானைட் முறைகேடு விவகாரம் குறித்துப் பேசும் இடதுசாரிகள் கிருஷ்ணகிரி கிரானைட் கொள்ளை குறித்துப் பேசத் தயாரா? அங்கு கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும்போது எப்படி பேச முடியும்?
"காந்திய மக்கள் இயக்கத்தின் தேர்தல் அறிக்கை பிற கட்சிகளைப்போல் மலிவான வாக்குறுதிகளுடன் இல்லாமல் மாறுபட்ட தேர்தல் அறிக்கையாக வெளிவந்துள்ளது. உதாரணமாக அதில் கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து இல்லை. ஆனால், தங்களது கடன்களைத் திரும்பிச் செலுத்தும் வளர்ச்சியை அவர்கள் பெற தேவையான திட்டமிடல் உள்ளது. "மாற்று அரசியலுக்கு முதல் முயற்சியாக தமிழகத்தில் 46 இடங்களில் போட்டியிடுகிறோம். 2021 சட்டப் பேரவைத் தேர்தலே எங்களது இலக்கு. அதற்குள் பெரும் மாற்று அரசியல் சக்தியாக வளர்ச்சி பெறுவோம்," என்றார் தமிழருவி மணியன்.