சென்னை: இலவசங்கள் மக்களை அடிமைப்படுத்துகின்றன என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையிலும் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் கட்சிகள் குறிப்பாக திராவிடக் கட்சிகள் இலவசங்களை அறிவித்து மக்களின் உணர்வுகளை மதிக்காத வகையில் நடந்து கொண்டிருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அதிமுக மட்டுமல்லாமல் திமுகவும் கூடத் தனது தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல பாமகவும் இலவசங்களை அறிவித்துள்ளது. பாஜகவும் தான் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு எட்டுக் கிராம் தங்கம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இதில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதில் மற்றவர்களை அதிமுக மிஞ்சிவிட்டது. சாத்தியமே இல்லாத பல திட்டங்களையும் அக்கட்சி அள்ளி விட்டுள்ளது. இலவச கைத்தொலைபேசி, பெண்கள் மோட்டார் சைக்கிள் வங்க 50 விழுக்காடு மானியம், ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 500 இலவச கூப்பன், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, விவசாயக் கடன் தள்ளுபடி, 100 யூனிட் வரை மின்கட்டணம் ரத்து, இலவச செட்டப் பாக்ஸ், இலவச ஆடு மாடு திட்டம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
திமுக அளித்துள்ள இலவச அறிவிப்புகள் - ஏழைகளுக்கு நவீன கைத்தொலைபேசி, மாணவர்களுக்கு இலவசமாக 3ஜி4ஜி இணையத் தள இணைப்பு, இலவச மடிக்கணினி, கையடக்கக் கணினி, மாதத்திற்கு 10 ஜிபி இலவச டவுன்லோட் வசதி. மாதந்தோறும் ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி, பயிர்க் கடன், கல்விக் கடன் ரத்து, ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 7 குறைப்பது என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பாஜகவும் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் கவர்ச்சிகரமானது வறு மைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு எட்டுக் கிராம் இலவசத் தங்கம். பாமகவும் பல இலவசங்களை அறிவித்துள்ளது. அதில் சென்னையில் இலவச பேருந்துப் பயணம் என்பது முக்கியமானது. இன்னும் எத்தனை காலம்தான் இலவசங்களை வாங்கி மக்கள் ஏமாறுவார்களோ என்கின்றன தமிழகத்திலுள்ள விழிப்புணர்வு இயக்கங்கள்.