நேற்று காலை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. தொடர்ந்து திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் தோல்வி முகம் கண்டதாக தகவல்கள் வெளியாகவே, அதிமுகவினரின் உற்சாகம் மென்மேலும் அதிகரித்தது.
இதையடுத்து இளையர் மற்றும் மாணவரணியைச் சேர்ந்தவர்கள் உடல் முழுவதும் அதிமுக கொடியைப் போன்று வர்ணம் பூசிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் உருவம் கொண்ட ஸ்டிக்கருடன் உற்சாக ஆட்டம் போடத் தொடங்கினர். இவர்களுக்குப் போட்டியாக அதிமுக மகளிரணியினரும் நடனமாடியதால், கூடியிருந்தவர்கள் உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் குளிர்பானங்களை விநியோகித்தனர். படம்: ஏஎஃப்பி