சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பலமுனைப் போட்டி நிலவியது. அதிமுக தனி அணியாக சிறிய கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டது. தேர்தலில் எப்படியும் வென்று விட வேண்டும் என்கிற கடடாயத்தில் இருந்த திமுக வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டது. இதற்காக அக்கட்சி விஜய காந்துக்கே முதலில் குறி வைத்தது. அவரை எப்படியும் திமுக கூட்டணியில் சேர்க்க பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலிக்கவில்லை. கூட்டணி விஷயத்தை பொறுத்தவரையில் விஜயகாந்துக்கு அடுத்த இடத்திலேயே திமுக - காங்கிரசை வைத்திருந்தது.
எதிர்பார்த்தபடி விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வராததால் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதி களைத் திமுக ஒதுக்கியது. இதில் அக்கட்சி குளச்சல், வள்ளியூர், விளவங்கோடு, நாங்குநேரி, முதுகுளத்தூர், காரைக்குடி, தாராபுரம் (தனி), உதகமண்டலம் ஆகிய 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே திமுக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்களை ஒதுக்கிவிட்டுத் திமுக. கூடுதல் இடங்களில் போட்டியிட்டு இருக்கலாம் என்கிற கருத்து அக்கட்சியினர் மத்தியில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
சென்னையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. கோப்புப்படம்