புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு மேற்கொண்டுள்ள தமது இரண்டு நாள் பயணத்தின்போது, சாப்ஹார் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாவது தவிர இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதே தனது பயணத்தின் நோக்கம் என்று மோடி கூறியுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் அனைத்துலக விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் சென்றடைந்த மோடியை அந்நாட்டு நிதியமைச்சர் அலி தய்யேபினியா வரவேற்றார். மோடியுடன் மத்திய தரைவழிக்- கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஈரான் சென்று உள்ளார். பிறகு இருவரும் இந்திய வம்சாவளியினரைச் சந்திப்பதற்காக அங்குள்ள சீக்கிய குருத்துவாராவுக்குச் சென்று வழிபட்டனர். பிரதமர் மோடிக்கு நேற்று காலை ஈரான் அரசு சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானியுடன் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மோடிக்கு ஈரான் அதிபர் மதிய விருந்து அளித்தார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சதாபாத் மாளிகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடது) நேற்று ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானியைச் (வலது) சந்தித்து ஈரான் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் குறித்து உரையாடினார். படம்: ஏஎஃப்பி