சென்னை: அதிகாலையில் வீட்டுக்கு வீடு சென்று பால் பொட்டலம் போடுபவர், செய்தித்தாள் போடுபவர்கள் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆட்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களுடன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும், ரௌடிகளும் பணப்பட்டுவாடா பணிக்கு ஈடுபடுத்தப்பட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் பொதுத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பாக ரகசிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து அதைத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளனர். இதில் தமிழகத்தில் எப்படியெல்லாம் பணம் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து அவர்கள் அதில் விவரித்துள்ளனர். படித்துப் பார்த்தால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நமது கட்சிகள் தில்லாலங்கடிகளைச் செய்துள்ளன.
உத்திகளை மாற்றிய கட்சிகள் வழக்கமாக கட்சியினர்தான் வீடு வீடாகப் போய் தங்களுக்குச் சாதகமானவர்களுக்குப் பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது இத்தனை காலமும். ஆனால் இந்த முறை கட்சிகள் உத்திகளை மாற்றி விட்டன. பால்காரர்கள், செய்தித்தாள் விநியோகிப்பாளர் உள்ளிட்டோரை இந்த முறை தங்களது பணிக்குக் கூட்டுச் சேர்த்துள்ளனர். உள்ளூரில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த மற்றும் கட்சிகளுக்குச் சாதகமான ரௌடிகளையும் பணம் கொடுக்கும் பணியில் அமர்த்தியுள்ளனவாம் கட்சிகள். 5,825 புகார்கள் தேர்தல் தொடர்பாக மொத்தம் 5,825 புகார்கள் வந்துள்ளன. அதில் 5,463 புகார்கள் ஏற்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.