மதுரை: பணத்துக்காக பெண்ணைக் கடத்திய வழக்கறிஞர் கைதானார். மதுரையைச் சேர்ந்த பவுன்பாண்டியன் என்ற அந்நபரின் ஏற்பாட்டின் பேரில் சிலர் போலிஸ்காரர்கள் வேடத்தில் சென்று தன்னார்வ நிறுவனம் நடத்தி வரும் டெய்சிராணியை சந்தித்துள்ளனர். விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றிய பின்னர் ரூ.5 லட்சம் தந்தால்தான் விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து தனது தோழி முத்துவிடம் கைபேசி மூலம் பணம் கேட்டுள்ளார் டெய்சி ராணி.
இதனால் மர்மக் கும்பல் அவரை தோழி முத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றது. எனினும் அக்கும்பல் மீது சந்தேகமடைந்த முத்து, போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அக்கும்பல் தப்பியோடியது. இதன் பிறகு போலிசார் நடத்திய தீவிர விசாரணையில் டெய்சி ராணிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.10 லட்சம் வர இருப்பதை அறிந்து அவரிடம் மிரட்டிப் பணம் பறிக்க வழக்கறிஞர் பவுன்பாண்டியன் திட்டமிட்டது தெரியவந்தது. அவர் கைதானார்.