சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி நடைபெறும் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார். பேரணிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்ப தாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேரறிவாளன் கடந்த 25 வருடங்களாக சிறையில் வாடி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என கூறியுள்ளார்.
"அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருப்பது சாதாரணமல்ல. அது மிகக் கொடுமையானது. அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறார். "இன்று வரையில் தாம் நிரபராதி என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த காவல்துறை அதிகாரியும் அதே கருத்தைத்தான் கூறியுள்ளார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு தாமதம் எனத் தெரியவில்லை," என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து சென்னை வரை நடைபெற உள்ள பேரணியை அனைவரும் ஆதரித்துப் பங்கேற்போம் என்றும் விஜய் சேதுபதி காணொளி மூலம் விடுத்துள்ள செய்தியில் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.