சென்னை: மக்கள் நலக்கூட்டணி யின் எதிர்காலம் குறித்து பலரும் சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், அக்கூட்டணியுடனான உறவை தேமுதிக துண்டித்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக படுதோல்வி கண்டது. 104 தொகுதிகளில் களம் கண்ட அக்கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும் தேமுதிகவின் வாக்கு விழுக்காடும் 2.4 ஆக குறைந்தது.
இந்தத் தோல்வி காரணமாக தேமுதிகவினர் மத்தியில் சோர்வும் கவலையும் நிலவுகிறது. இதைய டுத்து கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் விஜயகாந்த். தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கருத்து களைக் கேட்டறிந்துள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் மக்கள் நலக்கூட்டணியுடனான உறவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என விஜயகாந்திடம் கூறியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. எனவே இது தொடர்பான அறிவிப்பை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படு கிறது.