ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைக் கொச்சைப்படுத்தும் விதமாக 'வாட்ஸ்அப்' குழுவில் படம் வெளியானதை யடுத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் நிகழ்ந்த இந்த மோதலில் 33 வயது இளைஞர் ஒருவர் பலியானதாகவும் மேலும் 6 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் போலிசார் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இணையதள ஆர்வலரான ஜதின் ராஜ் 'வாட்ஸ்அப்'பில் 'விஜய் நகர் பிரெண்ட்ஸ்' என்ற குழுவைத் தொடங்கி அதில் உள்ளூர் மக்கள் பலரை இணைத்துள்ளார். அந்தக் குழுவில் அங்கம் வகித்த பிரசாந்த் நாயக் என்பவர் சோனியா சோனியா காந்தி பாத்திரம் துலக்குவது போன்ற படத்தையும் அதன் கீழே அவரை இந்த அளவுக்குத் தோல்வி அடையச் செய்தவர் பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் 'வாட்ஸ் அப்'பில் பதிவேற்றினார்.
இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜபல்பூரில் உள்ள 'அஹிம்சா செஷ்க்' என்ற பகுதியில் கூடி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று அந்த இரண்டு குழுவினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் போலிசார். இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலையில் காவல் நிலையத்திலேயே அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று போலிசார் தெரிவித்தனர். மோதலில் பலியான அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு புகைப்படக் கருவிவில் பதிவான இந்தக் காட்சிகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அக்கட்சியினர் போலிசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.