பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட லக்சய் என்ற 5 வயது குழந்தை (படம்) கோமா நிலைக்குச் சென்றுவிட்டான். அவன் இப்போது மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். "இந்த விஷயம் குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கூறி மல்லையா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சிகிச்சையின் போது தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய நஷ்டஈடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அத்துடன் சம்பந்தப் பட்ட டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று சுகாதாரத் துறை அமைச்சர் யுடி காதர் கூறியுள்ளார்.
குழந்தை லக்சய்க்கு கைவிரல்களில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 10ஆ-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவனுக்கு இதயத்திலும் நுரையீரலிலும் கோளாறு இருந்ததே இதற்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக சிறுவனின் தந்தை புருஷோத்தமன் தெரிவித்தார்.