திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஏரி உடைப்பைச் சரிசெய்ய வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
"இம்மாவட்டத்தில் மொத்தம் 1,236 ஏரிகள் உள்ளன. அவற்றுள் 862 ஏரிகள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின்போது முழுமையாக நிரம்பின. எனினும் 225 ஏரிகளின் கரைகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது. அப்போது மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப்பணித் துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். "இப்போதும் கனமழை பெய்வதால் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, மணல் மூட்டைகள் சரிந்துவிட்டன. எனவே ஏரிக்கரைகள் முழுமையாக உடைவதற்கு முன் உடைப்பைச் சரி செய்யவேண்டும்," என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஏரி உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.