மதுரை: தொலைபேசி வழி பெண் குரலில் இரண்டு பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக மதுரையில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. நேற்று முன்தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு வந்த அழைப்பில் பெண் குரல் ஒலித்தது. இரு தனியார் பள்ளிகளின் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று தகவல் தெரிவித்த கையோடு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து தெப்பக்குளம் போலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அப்பள்ளிகளுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பெண் குரலில் விடுக்கப்பட்ட அம்மிரட்டல் வெறும் புரளி என போலிசார் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது உண்மையிலேயே பெண்ணா அல்லது யாரேனும் குரலை மாற்றி பேசினாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.