திருப்பதி: பெங்களூரு, ஹைதரா பாத் ஆகிய நகரங்களில் தாக்குதல் மேற்கொள்ள பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதலை அரங்கேற்ற மூன்று பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பைச் சேர்ந்த 11 பேரை தேசிய புலனாய்வுப் பிரிவான என்ஐஏ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், கைத்தொலைபேசிகள், சிம் கார்டுகள், கையடக்கக் கணினிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்திய புலனாய்வுத்துறை இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து உண்டியல் பணம் அதிக அளவில் கிடைத்து வருவதாகவும் அந்தப் பணத்தை வைத்து இவர்கள் ஆயுதங்களை வாங்கிச் சேர்த்துள்ளதாகவும் இந்திய புலனாய்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் வெடிகுண்டு தயார் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.