லக்னோ: அரியானா மாநிலம், பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் (21) என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயாரைச் சேர்த்துவிட்டு அவருக்குத் துணையாக சதிஷ் அங்கேயே தங்கி இருந்தார். வியாழக்கிழமை இரவு சில மருந்துகளை எழுதித்தந்த மருத்துவர்கள் அவற்றை உடனடியாக வாங்கிவரும்படி கூறினர்.
மூன்றாவது மாடியில் இருந்து முதல் மாடியில் உள்ள மருந்துக் கடைக்குச் செல்வதற்காக வந்த சதிஷ், மின்தூக்கியின் பொத்தானை அழுத்தினார். கதவு மட்டும் திறந்தது, மின்தூக்கி அறையை அங்கு காணவில்லை. திறந்த கதவின் வழியாக மின்தூக்கி இயங்கும் பாதையை சதிஷ் கீழே குனிந்து பார்த்தார். அதற்குள் நான்காவது மாடியில் இருந்து வேகமாக வந்த மின்தூக்கி, சதிஷின் தலையில் கொடூரமாக மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த சதிஷ் மின்தூக்கியின் அடியில் சிக்கி மாண்டார்.