ராமநாதபுரம்: இளம்பெண்ணுடன் சேர்ந்து இருக்கும் படத்தை வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவதாக மிரட்டிய இளையரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான மருதுபாண்டியன் திருவாடானை அருகேயுள்ள விசும்பூர் கிராமத்திற்கு அடிக்கடி வந்துபோவது வழக்கம். இதன் மூலம் அக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக அப்பெண் கூற, தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மருதுபாண்டியன் கூறியுள்ளார். இல்லையேல் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் வெளியிடப் போவதாக மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் காவல்துறையை அணுக, மருதுபாண்டியன் கைதானார்.