இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தாம் அளித்த மனு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாநிலத் தகவல் ஆணைய உயரதிகாரிக்கு பதிவுத் தபாலில் ரூ.500 லஞ்சப் பணம் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "ககரியா மாவட்டத்தைச் சேர்ந்த சனோஜ் மிஸ்ரா என்ற அந்த ஆடவர், தமது மனுவைப் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி தம் கைப்பட இந்தி மொழியில் ஒரு கடிதத்தை எழுதி, அதனுடன் அதிகாரியின் பிள்ளைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுக்கும்படி ஐநூறு ரூபாயையும் இணைத்து அனுப்பியுள்ளார்," என்று பீகார் தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் விவரித்தார்.
கடித உறையில் இடம்பெற்று இருந்த முகவரியில் 'தகவல் ஆணைய உயரதிகாரிக்கு' என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இது தொடர்பாக தலைநகர் பாட்னாவில் உள்ள சச்சிவால்யா காவல் நிலையத்தில் ஆணையம் புகார் அளித்துள்ளது.