சென்னை: இலக்கியங்களை எல்லாம் ஒன்றுபடுத்துவதற்கு ஒரே வழி சாகித்ய அகாடமியின் மொழி பெயர்ப்புதான் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். சாகித்ய அகாடமி சார்பில் சென்னையில் நடைபெற்ற வடகிழக்கு, தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை அரசியலால், மதத்தால் ஒன்றுபடுத்த முடியும் என்று தம்மால் நம்ப முடியவில்லை என்றார்.
"கலை, இலக்கியத்தின் வழியாகத்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்று நம்புகிறேன். நாட்டில் பல பிரச்சினைகளுக்கு காரணம் புரிதலற்ற போக்குதான். கலை, இலக்கியம்தான் புரிதலை மட்டுமே முன்வைக்கிறது. "மொழி பெயர்ப்பு எவ்வளவு விரைவில் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு இனங்களுக்கு இடையிலான கலை உறவு மேம்படும். இலக்கியம் என்பது புளித்த ஏப்பக்காரர்களின் பொழுது போக்கு என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. அதை முற்றிலும் மறுக்கிறேன்," என்றார் வைரமுத்து.