நகரி: கர்னூலில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். கர்னூல் மாவட்டம் நெரவாடா மெட்டா பகுதியைச் சேர்ந்தவர் சபீர்பாஷா. இவரது மகன் இத்தூருஸ் பாட்சா, 20. பொறியியல் துறையில் படித்து வந்தார். இவர் ரயில் வேகமாகச் செல்லும் போது அதனருகே நின்று செல்ஃபி எடுக்க விரும்பினார். தனது நண்பர் ஹரிஸுடன் கல்லூரி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றார். அங்கு இருவரும் ரயில் வரும் சமயத்தில் ஒன்றாக நின்று செல்ஃபி எடுக்க முடிவு செய்தபோது வேகமாக ஒரு ரயில் வந்து கொண் டிருக்க, இதைப் பார்த்த இருவரும் செல்ஃபி எடுக்கத் தயாராயினர். ஆனால், அவர்கள் செல்பி எடுப்பதற்குள் ரயில் அருகே வந்து விட்டது.
சுதாரித்துக் கொண்ட ஹரிஸ் தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கினார். ஆனால், இத்தூருஸ் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த மாணவர் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.