புதுடெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13,300 சதுர கி.மீ. பகுதி "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்" பகுதி உள்ளது. இப்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதி சுயேச்சை மாநிலமாக இருக்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மட்டுமே இதுவரை முகாம் அமைத்துத் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் சீனா = பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைகோத்து ஒன்றிணைந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் சீன ராணுவ வீரர்களும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் ஒன்று சேர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையைச் சீனா எடுத்திருப்பது உறுதியாகியுள்ளது.