டேராடூன்: வட இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ அம்மாநிலத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அங்குள்ள சிலர் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஹரித்துவார் பூங்காவில் திருவள்ளுவர் சிலை கீழே கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.
இதற்கிடையே உலகப் புகழ்ப்பெற்ற திருக்குறளைத் தந்த வள்ளுவரின் சிலை அலட்சியமாக போடப்பட்டிருக்கும் தகவல் தீயாக ஊடகங்களில் பரவியது. இது, தமிழக முதல்வரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து, சிலையை நல்ல இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை அரசு வளாகத்துக்குள் நிறுவ உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து முசோரி=டேராடூன் மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதி காரியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஆர். மீனாட்சி சுந்தரம் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த மீனாட்சி சுந்தரம், ஒரு நல்ல இடம் தேர்வு செய்து வள்ளுவர் சிலை நிறுவப்படும். கங்கை நதிக்கரையோரம் உள்ள மேளா பவனில் வள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது," என்றார்.