வழக்கறிஞர் செயல்பாடுகளை முறைப்படுத்தும் புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்கள் நேற்று போலிசாரின் பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலிசார் மீது போத்தல்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. சில இடங்களில், போலிசுக் கும் வழக்கறிஞர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் உரத்த குரலில் கை உயர்த்தி பேசக்கூடாது, ஆவேசமாக வாதிடக்கூடாது, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது, நீதிபதியிடம் பேசும்போது இட அளவு நிர்ணயம், நீதிமன்றம் நினைத்தால் வழக்கறிஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் இருப்பதாக புதிய சட்ட திருத்தத்திற்குத் தமிழக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவின்றனர். இதனால் வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் மோதல் போக்கு வலுத்துள்ளது. இது தொடர்பாக போராட்டம் நடத்தி நீதிமன்ற நடவடிக் கைக்குப் பாதிப்பு ஏற்படுத்திய 126 பேர் நேற்றுமுன்தினம் இரவில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதையடுத்து நேற்று சென்னை நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி, நீதிபதிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிக்குழுவை சந்தித்து வழக்கறிஞர்கள் முறையிடாததே போராட்டத்துக்குக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தெரிவித்துள்ளார். "தலைமை நீதிபதியாக இந்த விவகாரத்தில் நான் எதுவும் செய்ய முடியாது. சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறுவது குறித்து விதிக்குழுதான் முடிவு செய்ய வேண் டும்," என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையே பாரிமுனைப் பகுதியில் தடுக்கப்பட்ட வழக்கறிஞர் கள், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.