நெல்லை: தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மது அருந்திய போதையுடன் அதை ஓட்டியது தெரியவந்ததையடுத்து, அவர் கைதானார். நேற்று முன்தினம் தேவாளை புதூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஆம்புலன்சில் நெல்லையைச் சேர்ந்த மூன்று பேர் இருந்தனர். நாற்பது வயதான சேர்மத்துரை என்பவர் ஓட்டினார். இரவு 8.30 மணிக்கு தோவாளை ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது ஆம்புலன்ஸ்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த முத்துப்பேச்சி (35) என்பவர் சாலையில் நடந்து வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதிய ஆம்புலன்ஸ் வாகனம், பின்னர் அருகே இருந்த ஒரு கொடிக் கம்பத்தில் மோதி நின்றது. படுகாயம் அடைந்த முத்துப்பேச்சி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் பிடித்து நையப்புடைத்தனர். போலிசார் நடத்திய விசாரணையின்போது அவர் மது போதையில் வாகனத்தை ஓட்டியது அம்பலமானது.