சென்னை: தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக் கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கினால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,000 வரை குறையும் என அவர் கூறியுள்ளார். "இந்தியாவில் ஒரு மாதத்திற்கான தங்கத்தின் தேவை 50 டன்னாகும். இதில் 20 டன் தங்கம் நகையாகச் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
மீதமுள்ள 30 டன் தங்கம் மட்டுமே உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படும். இதில் 10 முதல் 12 டன் தங்கம் மட்டுமே முறையாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், 20 டன் தங்கம் கடத்தி வரப்படுகிறது," என ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். தங்கத்தின் விலை குறைந்தால் திருமணத்திற்காக நகை வாங்க வேண்டிய நிலையிலுள்ள மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.