சென்னை: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்த காலியாக உள்ள 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 110-ஆவது விதியின் கீழ் பள்ளிக் கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகளை மேம்படுத்த ரூ.359.22 கோடியில் பல புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மணமகனே இல்லாத திருமணத்துக்கு ஆடம்பரமாக அலங்காரம் செய்ததைப் போல, இந்த அறிவிப்புகள் உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்காமல் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை.
தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு கொண்ட துணைவேந்தர்கள்தான் தேவையே தவிர, பயனற்ற திட்டங்கள் தேவையில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பிறரது திட்டங்களை தமது திட்டமாக அறிவிப்பதை விடுத்து மூன்று பல் கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நியமிக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "தமிழக அரசில் உள்ள 54 துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் தாம் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தீரா தாகத்தால் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
"ஆனால் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவை கடந்த பல மாதங்களாகத் துணைவேந்தர் இல்லாத பல்கலைகளாக தடுமாறி வருகின்றன என்பதுதான் சோகமான உண்மை," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 5,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் பெரும் கூட்டரங்கம் கட்டுவது தேவையில்லாத வீண் திட்டம் என்று குறிப்பிட்டுள்ள அவர், சென்னையில் தேசிய அளவிலோ, உலக அளவிலோ நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் இதுவரை 5,000 பேர் பங்கேற்றதில்லை எனவும் இனிமேலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
"உயர்கல்வித்துறை சார்பில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.359.22 கோடி ஆகும். இந்தத் திட்டங்களுக்காக அரசு சல்லிக்காசு கூட செலவழிக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை. மாணவர்களிடம் வசூலித்தும் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து மானியமாக பெற்றும் சேர்த்து வைத்திருக்கும் நிதியில் பல்கலைக்கழகங்கள் செயல்படுத் தும் திட்டங்களை அரசின் திட்டங்களாக முதல்வர் அறிவித்துள்ளார். "இவ்வாறு மத்திய அரசின் திட்டங்களையும் மற்றவர்களின் திட்டங்களையும் தமது திட்டமாக காட்டுவது அழகல்ல," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.