தனியாருக்குச் சொந்தமான பேருந்துகளைத் திருடி பணம் சம்பாதித்த இளையரை தமிழக போலிசார் கைது செய்தனர். கடலூரை ஒட்டியுள்ள கங்க னாங்குப்பம் பகுதியில் வேகமாக வந்த ஒரு தனியார் பேருந்து, மாட்டு வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலிசார், அந்த வழியாக வேகமாக வந்த பேருந்துகளைச் சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்தி விசாரித்தபோது அதன் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர் அந்தத் தனியார் பேருந்தைத் திருடியது தெரிய வந்தது. அஜித் குமார் என்ற அந்த இளையர் பேருந்தைக் கடத்தி, ஓட்டுநர் போல் நடித்து பயணி களிடம் பயணச்சீட்டு விற்று பணம் ஈட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். எரிபொருள் தீர்ந்தவுடன் பயணிகளைப் பற்றிக் கவலைப் படாமல் பேருந்துகளை நடு வழியில் நிறுத்திவிட்டு அவர் ஓடிவிடுவாராம். இதுபோல, 17 பேருந்துகளைக் கடத்தி பணம் சம்பாதித்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவரைக் கைது செய்த போலிசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.