சென்னை: பிரபல திரைப்பட நடிகர் அருண் விஜய் போலிஸ் காவலில் இருந்து தப்பியோடியதாக வெளியான தகவலை காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய அருண் விஜய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றார். கடந்த 26ஆம் தேதி இரவு மதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் அருண் விஜய், காவல்துறை வாகனம் மீது மோதியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் காவலில் இருந்தபோது அவர் தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அருண் விஜய் தலைமறைவாகிவிட்டதாக வெளியான செய்தி உண்மையல்ல எனத் தெரிய வந்துள்ளது. "அந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டிருந்தால் அருண் விஜய்யை கைது செய்யலாம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. சேதமடைந்த வாகனத்தைச் சரிசெய்து தருவதாக அருண் தரப்பு கூறியுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்கும் விபத்தை ஏற்படுத்தியதற்கும் அவர் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்," என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.