குட்டைப் பாவாடை அணிய வேண்டாம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய அமைச்சர் அறிவுரை

இந்தியாவுக்குச் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணியாமல் இருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பானது என்று கூறி, சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. ஆக்ராவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய திரு சர்மா, "இந்திய கலாசாரம், மேற்கத்திய கலாசாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகையால், இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி குட்டையான ஆடைகளையோ அல்லது உடல் அங்கங்கள் தெரியும்படியான ஆடைகளையோ அணிய வேண்டாம்," என்று சொன்னார்.

அத்துடன், இரவு நேரங்களில் தனியாகச் செல்வதையும் அவர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். "இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு நல்வரவு அட்டை தரப்படும். அதில், அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும்போது செய்யத் தகுந்தவை, செய்யக்கூடாதவை பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்," என்றும் அவர் கூறினார். அத்துடன், வெளிநாட்டவர்களுக்கு உதவுவதற்காக 1363 என்ற உதவி அழைப்பு எண்ணையும் அவர் அறிமுகப்படுத்தினார். மேலும், "தாங்கள் பயணம் செய்யும் கார்களின், வாகனங்களின் பதிவு எண்ணைப் படம்பிடித்து, அதைத் தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைக்கவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தமது கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, சமயம் சார்ந்த இடங்களுக்குச் செல்லும்போது குட்டைப் பாவாடை அணிய வேண்டாம் என்ற பொருளில் மட்டுமே தாம் சொன்னதாகவும் அது வேறு பொருளில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் நேற்று மறுப்புத் தெரிவித்துள்ளார். "நானும் இரு பெண்களின் தந்தைதான். பெண்கள் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஒருபோதும் வற்புறுத்தமாட்டேன். 'விருந்தினர்கள் கடவுளைப் போல' என்பதுதான் நமது கலாசாரம். அத்தகையதொரு தடையை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

ஆயினும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரியான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடும். ஆனால், ஒருவரது ஆடைப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நான் ஒருபோதும் சொன்னது கிடையாது," என்று அவர் விளக்கமளித்தார். அவரது விளக்கத்திற்குப் பின்னரும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிர்ப்பலை தொடர்ந்தது. அவரது கருத்துக்குப் பதிலடி தருவது போன்ற ஒரு கருத்தைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். "மோடி காலத்தைவிட தங்களுக்கு விருப்பப்பட்ட ஆடையை அணிய வேத காலத்தில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது," என்று அவர் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!