சென்னை: காவிரி கண்காணிப்பு குழுவிடம் தமிழகம் முறையிடாதது முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.
இதற்கிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். "சம்பா பருவ சாகுபடிக்கு போதுமான தண்ணீரின்றித் தமிழக விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இத்தகைய சூழ் நிலையில், சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை கர்நாட காவிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும்," என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை பெறுவதற்கு கர்நாடகத்தை வழிக்கு கொண்டு வரவும் நீர் பற்றாக்குறை காலங்களில் முறையான பங்கீட்டை உறுதி செய்யவும் மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமிழக முதல்வர் அனைத்துக்கட்சிக் குழு அமைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.