ஹைதராபாத்: இந்தியப் பெருங்கடல் பகுதியை ஒட்டியுள்ள இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் பங்கெடுக்கும் இரண்டு நாள் சுனாமி பாவனை பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பாவனை பயிற்சியின் மூலம் எச்சரிக்கை, பேரிடர்களைக் கண்டறிதல் போன்றவை சோதிக்கப்படும். மேலும் அதிகாரிகளுக்கு கிடைக்கும் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள் சரியான நேரத்தில் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதும் கண்டறிப்படும். நேற்று காலை தொடங்கப்பட்ட இந்த பாவனை பயிற்சியில், இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ராவில் ரிக்டர் அளவில் 9.2 என நிலநடுக்கம் ஏற்பட்டதாக கொள்ளப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமி அந்தமான் நிக்கோபர் தீவுகளையும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளையும் தாக்கும். 'யுனெஸ்கோ' அமைப்பு ஏற் பாடு செய்துள்ள இந்த பாவனை பயிற்சியின்போது, சுனாமி எச்சரிக்கை கிடைத்த மூன்று மணி நேரத்தில் இந்தியக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 40,000 மக்களை அங்கிருந்து எவ்வாறு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது என்பது இந்திய அதிகாரிகளுக்கு பயிற்சியாக அமைந்தது.
ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் கடலோரக் கிராமங்களில் இந்த பாவனை பயிற்சி நடத்தப்பட்டது. தமிழகத்தில் மரக்காணம் அருகே உள்ள பனிச்சமேடு கிராமத்தில் இந்த பாவனை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.