சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். "ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோதும் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறைபிடித்து அவற்றைத் திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் பேசியபோதும் அதற்கு மத்திய அரசோ, பிரதமர் மோடியோ பதில் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர்.
தற்போது காவிரி பிரச்சினையில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்சினையிலும் மத்திய அரசு தலையிட்டுத் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதற்கு உத்திரவாதம் அளிக்கவில்லை. இவ்வாறு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டியுள்ளது," என்று சீமான் சொன்னார்.