பெங்களூரு: பெங்களூரில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனங்கள் இப்போது அங்கிருந்து வெளியேறி வேறு மாநிலங்களுக்குச் செல்லக்கூடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெங்களூரில் அடிக்கடி நிகழும் குற்றச்செயல்கள், வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பெரிய அளவில் வர்த்தகம் முடங்கியுள்ளது. அங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்களை நம்பி வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களும் ஏராளமான பணி களை அளித்து வருகின்றன.
அங்கு தொடர்ச்சியாக நடை பெற்று வரும் வன்முறையால் பல மில்லியன் டாலர் வருமானத்தை அந்நிறுவனங்கள் இழந்துள்ளன. இதனால் அந்நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாகனச் சட்டம், காவிரி, மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரங்களுக்காக ஒரே மாதத்தில் கர்நாடகாவில் பல்வேறு முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், காவிரி விவகாரத்தில் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டு தொழில் நிறுவனங்கள், கடைகள், பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்து, ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டனர். இதனால் பல நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிப்போயின.
இதுகுறித்துத் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரில் தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி, விமானவியல், நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் இந்தியா கோடிக்கணக்கான ரூபாய் வரி வருவாய் பெற்று வருகிறது. இந்த நிறுவனங்களால் உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனர். இந்த நிறுவனங்கள் தடையின்றிச் செயல்படுவதால் பலரின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.
இப்போது அங்கு பெருகிவரும் வன்முறைகளால் தொழில், வர்த்தகச் சூழல் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தைப் பிரித்துத் தெலுங்கானா மாநிலத்தை அமைக்கக் கோரி ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்த தொடர் வன்முறைகளால் அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றன. ஹைதராபாத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்தன. இதேபோல இப்போது பெங்களூருவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகர்களுக்கு இடம் பெயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.