புதுடெல்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரி மனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியலில் உள்ள பலர் மீது கொலை, கொலை முயற்சி, சதி போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத் தடுக்க தண்டனை பெற்ற குற்றவாளிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.
இதை எதிர்த்துப் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபாத்யாயா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அரசுப் பணிகளில் இருப்பவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு போட்டியிட வழிவகுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு சட்டவிரோதமானது.