சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் சந்தித்ததாக செய்தி வெளியான சிறிது நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார். முன்னதாக சத்யமூர்த்தி பவனில் கூடிய காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் குமரி அனந்தன், தங்க பாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, செல்வ பெருந்தகை, கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, ஆரூண் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரசின் நிலைப்பாடு, போட்டியிடும் இடங்களை முடிவு செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "ஒரு தலைவரை மற்றொரு தலைவர் சந்தித்துப்பேசுவது வழக்கமானதுதான். இன்று நானும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினேன். கூட்டணி என்று யாரும் அறிவிக்கவில்லையே," என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் விவாதித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் (இடமிருந்து 5வது). படம்: தமிழக ஊடகம்