சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத் தான நிலையில் உள்ள 11 மாடிக் கட்டடம் இன்று இடிக்கப்படவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக் கத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடிக் கட்டிடம் கடந்த 2014ஆம் ஆண்டு இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர் பாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகே உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அந்த கட்டடத்தை இடிக்கும் பணியை தமிழக அரசும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையமும் (சிஎம்டிஏ) தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தன.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தை செப்டம்பர் 25ஆம் தேதி (இன்று) வெடி வைத்துத் தகர்க்க முடிவு செய்து இருப்பதாக சிஎம்டிஏ மற்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டடத்தைத் தகர்க்க வெடி மருந்துகள் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. இதனால் கட்டடத்தைச் சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அவர்களின் இருப்பிடத்திலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நடக்கவிருந்த கட்டட இடிப்பு வேலைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடிக்கப்பட இருந்த 11 மாடிக் கட்டடம். படம்: தமிழக ஊடகம்